கவியரசு கண்ணதாசன் கவிதைகள்

பதிப்பு 1

   அனுபவமே கடவுள்...

       பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

       பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

       படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

       படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

       அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

       அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

       அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

       அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

       பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

       பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

       மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

       மணந்து பாரென இறைவன் பணித்தான்!

       பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

       பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

       முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

       முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

       வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

       வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

       இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

       இறந்து பாரென இறைவன் பணித்தான்!

       அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

       ஆண்டவனே நீ ஏன்? எனக் கேட்டேன்!

       ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

       "அனுபவம் என்பதே நான்தான்" என்றான்!

    'எல்லாம் அவன் செயலே'

  காக்கை குருவியைப்போல்

  கவலையின்றி நீயிருந்தால்

  யாக்கை கொடுத்தவனை

  யார்நினைப்பார் இவ்வுலகில்

  சட்டியிலே வேகின்ற

  சத்தெல்லாம் சரக்கானால்

  மட்டின்றிப் படித்துவந்த

  மருத்துவர்க்கு வேலையென்ன

  கடலருகே வீற்றிருந்தும்

  கடுந்தாகம் வரும்பொழுதே

  கடவுளெனும் ஒருவனது

  கைசரக்கு  நினைவுவரும்

  இன்னதுதான் இப்படித்தான்

  என்பதெல்லாம் பொய்க்கணக்கு

  இறைவனிடம் உள்ளதடா

  எப்போதும் உன்வழக்கு

  எல்லாம் அவன்செயலே

  என்பதற்கு என்ன பொருள்

  உன்னால் முடிந்ததெல்லாம்

  ஓரளவே என்று பொருள்.