கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகள்

பதிப்பு 1

    வாழ்க்கைத் தத்துவங்கள்

 நாமே நமக்குத் துணையானால்

       நாடும் பொருளும் நாற்புகழும்

 தாமே நம்மைத் தேடிவரும்

       சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ?

 நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு

       நேயம் கொண்ட நெறியோர்க்கு

  விஞ்சும் பொறுமையுடையவர்க்கு

       வெல்லும் படைகள் வேறுளவோ?

  உள்ளந் தேறிச் செய்வினையில்

        ஊக்கம் பெருக உழைப்போமானால்

  பள்ளம் உயர்மே டாகாதோ?

        பாறை பொடியாய்ப் போகாதோ?

  கால நதியின் கதியதனில்

       கடவுள் ஆணை காண்பீரெல்

  ஞால மீது சுகமெல்லாம்

       நாளும் அடைந்து வாழ்வீரே!

      

 உடல் நலம் பேணல்

 உடலின் உறுதி உடையவரே

      உலகில் இன்பம் உடையவராம்;

 இடமும் பொருளும் நோயாளிக்கு

      இனிய வாழ்வு தந்திடுமோ?

 சுத்த முள்ள இடமெங்கும்

      சுகமும் உண்டு; நீ அதனை

 நித்தம் நித்தம் பேணுவையேல்,

      நீண்ட ஆயுள் பெறுவாயே!

 காலை மாலை உலாவிநிதம்

      காற்று வாங்கி வருவோரின்

 காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

      காலன் ஓடிப் போவானே!

 ஆளும் அரசன் ஆனாலும்

      ஆகும் வேலை செய்வானேல்,

  நாளும் நாளும் பண்டிதர்கை

      நாடி பார்க்க வேண்டாமே.

  கூழை யேநீ குடித்தாலும்

      குளித்த பிறகு குடி, அப்பா!

  ஏழை யேநீ ஆனாலும்,

      இரவில் நன்றாய் உறங்கப்பா!

  மட்டுக் குணவை உண்ணாமல்

      வாரி வாரித் தின்பாயேல்,

  திட்டு முட்டுப் பட்டிடுவாய்!

      தினமும் பாயில் விழுந்திடுவாய்.

  தூய காற்றும் நன்னீரும்,

      சுண்டப் பசித்த பின் உணவும்,

  நோயை ஓட்டி விடும், அப்பா!

      நூறு வயதும் தரும், அப்பா!

  அருமை உடலின் நலமெல்லாம்

  அடையும் வழிகள் அறிவாயே!

  வருமுன் நோயைக் காப்பாயே

      வையம் புகழ வாழ்வாயே.