விடுகதைகள்
விடுகதை எனப்படுவது நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றாகும். விடுகதைகள் 'மக்களின் அறிவுத்திறனின் வெளிப்பாடு' என அறிஞர்கள் வருணிக்கின்றனர். தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறைபொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவமே விடுகதை. விடுகதைகள் கற்பனை வளத்துடன் கவிதையாகவும் கதையாகவும் உரைநடையாகவும் வழங்கி வருகின்றன. அவை தனிப்பட்ட ஒருவராலும் உருவாக்கப்பட்டவை அல்ல. காலங்காலமாக வாய்வழி வாய்வழி சொல்லக் கேட்டு செவிவழி செவிவழி பரவி வந்தவையாகும். காலத்திற்கு ஏற்ப அவை பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்றன. அவை நமது சிந்தனைக்கு விருந்தாக அமைந்து அறிவு வளர்ச்சிக்கு வழிகோலுகின்றன. சிறுவர் முதல் முதியோர்வரை அனைவரும் விடுகதைகள் சொல்வதிலும் அவற்றை விடுவிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
சில தெரிவு செய்யப்பட்ட விடுகதைகளைக் கீழே காணலாம். அவற்றைப் படித்து உங்கள் சிந்தனைக்கு வேலை கொடுத்து விடைகாண முயற்சி செய்யுங்கள். விடைகள் இறுதிப் பகுதியில் தரப்பட்டுள்ளன.
1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?
2. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?
3. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
4. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
5. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?
6. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபங் கட்டி, ஒருவர் கண்பட்டு உடைந்ததாம்
மண்டபம். அது என்ன?
7. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்?
8. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல.
அது என்ன?
9. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
10. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?
11. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?
12. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும்
பகலும் ஓட்டந்தான். அது என்ன?
13. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?
14. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?
15. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன?
16. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?
17. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?
18. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன?
19. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன?
20. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
21. கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?
22. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?
23. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?
24. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல்
இல்லை. அது என்ன?
25. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை?
26. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?
27. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள்
சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?
28. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன?
29. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?
30. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?
விடுகதைகளுக்கான விடைகள்
1. மிருதங்கம்
2. சாம்பிராணி
3. வளையல்
4. மதி
5. பாம்பு
6. தேன் கூடு
7. நிலா
8. சூரியன்
9. காற்று
10. மரம்
11. குடை
12. மூச்சு
13. பம்பரம்
14. வானம்
15. தண்ணீர்
16. குளிர்
17. நெருப்பு
18. தீக்குச்சி
19. உரோமம்
20. கடிகாரம்
21. புகை
22. வியர்வை
23. உப்பு
24. சட்டை
25. எறும்புகள்
26. கொடி
27. துத்தநாகம்
28. முட்டை
29. மழை
30. பெட்ரோல்